< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர் மக்களின் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம்: ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மக்களின் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம்: ராகுல் காந்தி

தினத்தந்தி
|
22 Aug 2024 10:27 AM GMT

ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துரையாடினர்.

அப்போது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "மக்களவைத் தேர்தலின் போது இந்தியா கூட்டணி, மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை, காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்தியா கூட்டணியின் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார்.

இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர், யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்டபோது, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமானது. இதுபோன்று முன்னதாக நடக்கவில்லை. எனவேதான் ஜம்மு காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம். மேலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்