< Back
தேசிய செய்திகள்
நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் படுகொலை; கணவர் கைது
தேசிய செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் படுகொலை; கணவர் கைது

தினத்தந்தி
|
7 Jun 2023 9:35 PM GMT

ராய்ச்சூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

படுகொலை

ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா மெகபூப் நகரை சேர்ந்தவர் சித்து கொந்தலே. இவரது மனைவி ஷில்பா(வயது 28). இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதுபோல், நேற்று முன்தினம் நள்ளிரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சித்து வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து தனது மனைவி ஷில்பாவை சரமாரியாக குத்தினார். இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ஷில்பா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதையடுத்து சித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்

நேற்று அதிகாலையில் ஷில்பா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சிந்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது ஷில்பாவுக்கும், வேறு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சித்து சந்தேகப்பட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சித்து தகராறு செய்து வந்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினமும் இந்த விவகாரம் தொடர்பாக உண்டான தகராறில் மனைவியை சித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிந்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்துவை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்