< Back
தேசிய செய்திகள்
ஒரே குடும்பத்தில் 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை

தினத்தந்தி
|
24 Feb 2023 8:30 PM GMT

கார்வார் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேரை அரிவாளால் வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மங்களூரு:

கார்வார் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேரை அரிவாளால் வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சொத்து தகராறு

உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே பட்கல் தாலுகா ஹடவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்பு பட்(வயது 70). இவரது மனைவி மாதேவி பட்(60). இவர்களது மகன் ராஜீவ் பட்(34), மருமகள் குசுமா பட்(30). ராஜீவ் பட்-குசுமா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

4 பேர் படுகொலை

இந்த நிலையில் நேற்று மாலையில் இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அதிரடியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், ஷம்பு பட், அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளால் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி பட்கல் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அவர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடந்த ஷம்பு பட் உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து தகராறில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். ஷம்பு பட் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குழந்தை மட்டும் உயிருடன் உள்ளது. எதுவும் அறியாத அந்த குழந்தை பரிதாபமாக அழுது கொண்டே இருந்தது. அதைப்பார்த்த அப்பகுதியினர் பலரும் கண்கலங்கினர். அந்த குழந்தையை தற்போது போலீசார் மீட்டு காப்பக்கத்தில் ஒப்படைத்து உள்ளனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்