< Back
தேசிய செய்திகள்
குஜராத்: 141 பேரை காவு வாங்கிய தொங்கு பாலம் - 9 பேர் கைது
தேசிய செய்திகள்

குஜராத்: 141 பேரை காவு வாங்கிய தொங்கு பாலம் - 9 பேர் கைது

தினத்தந்தி
|
31 Oct 2022 8:22 AM GMT

குஜராத், மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.

சில மாதங்களுக்கு முன்பு அப்பாலம் மறுசீரமைக்கப்பட்டது. அப்பணி முடிந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று இரவு 'சத்' பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் பொத பொதவென விழுந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பாலம் இத்தனைக்கும் சீரமைக்கும் பணிகள் முடிந்து சில நாட்களில் இந்த கோர விபத்து நடைபெற்றது தான் பெரும் துயரம். இந்த விபத்து குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத், மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். ஆற்றில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகளை பார்வையிடுகிறார்.

மேலும் செய்திகள்