< Back
தேசிய செய்திகள்
காதலை கைவிட மறுத்த வாலிபர் படுகொலை.. இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்
தேசிய செய்திகள்

காதலை கைவிட மறுத்த வாலிபர் படுகொலை.. இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
17 May 2024 1:06 AM GMT

தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததால் பட்டப்பகலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி டவுன் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் இப்ராகீம் கவுஸ் (வயது 22). இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதுபற்றி இளம்பெண்ணின் சகோதரர் முசாமில் சட்டிகேரி என்பவருக்கு தெரியவந்தது. உடனே அவர் இப்ராகீம் கவுசை அழைத்து எச்சரித்தார். மேலும் தனது சகோதரியை விட்டு விலகும்படி கூறினார். எனினும் இப்ராகீம் கவுஸ் தொடர்ந்து இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் நேரத்தில் இப்ராகீம் கவுஸ், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அதை பார்த்து, உடனே அவர்களை பின்தொடர்ந்து சென்ற முசாமில் சட்டிகேரி, இப்ராகீம் கவுசியிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் முசாமில் சட்டிகேரி தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து இப்ராகீம் கவுசை சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர், இப்ராகீம் கவுசை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய முசாமில் சட்டிகேரியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்