< Back
தேசிய செய்திகள்
மராட்டியம்: பெண்களுக்கு பார்கிங் பகுதியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பு
தேசிய செய்திகள்

மராட்டியம்: பெண்களுக்கு பார்கிங் பகுதியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Dec 2022 9:39 AM GMT

மராட்டியத்தில் பெண்களுக்கு பொது வாகன பார்கிங் பகுதியில் 20 சதவீதம் அளவுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் என அரசு அறிவித்து உள்ளது.



நாக்பூர்,


நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் மகளிர் இடஒதுக்கீடு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மராட்டியத்தில் பெண்களுக்காக மற்றொரு இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்து உள்ளது.

இதன்படி, மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி மங்கள் பிரபாத் லோதா பேசும்போது, பொது இடங்களில் பெண்களுக்கு பார்கிங் பகுதியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க அரசு முடிவு செய்து உள்ளது.

இதனால், மராட்டியத்தில் விரைவில் மகளிர் வாகன ஓட்டுனர்கள் மட்டும், என்ற பெயர் தாங்கிய பலகைகள் பொது வாகன நிறுத்துமிடங்களில் வைக்கப்பட உள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக மராட்டிய அரசு இதனை மேற்கொண்டு உள்ளது.

இதன்படி, ஆண்கள் இல்லாத பெண்கள் மட்டுமே வாகனங்களை நிறுத்துவதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் அறிமுகம் செய்யப்படும் என அவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்