
Image Courtacy: PTI
கடனுக்கான வட்டியை முன்பே உயர்த்தி இருந்தால் பொருளாதாரம் முற்றிலும் சரிவடைந்து இருக்கும் - ரிசர்வ் வங்கி கவர்னர்

கடனுக்கான வட்டியை முன்பே உயர்த்தி இருந்தால் பொருளாதாரம் முற்றிலும் சரிவடைந்து இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.
மும்பை,
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பதற்கு முன்பு, பணவீக்க விகிதம் 4.3 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது. ஆனால், போர் தொடங்கியவுடன் கணிப்புகள் பொய்த்து போய்விட்டன. விலைவாசி உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்துவிட்டது.
அதனால், பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் குறைப்பது என்ற இலக்கை ரிசர்வ் வங்கி தவற விட்டு விட்டது உண்மைதான். பணவீக்கத்தை குறைக்க கடந்த மே மாதத்தில் இருந்துதான் கடனுக்கான வட்டியை (ரெபோ ரேட்) உயர்த்த தொடங்கினோம்.
ஆனால், இன்னும் முன்கூட்டியே கடனுக்கான வட்டியை உயர்த்தி இருந்தால், பொருளாதாரம் முற்றிலும் சரிவுப்பாதையை நோக்கி திரும்பி இருக்கும். நாம் பெரிய விலையை கொடுக்க வேண்டி இருந்திருக்கும். அதை தவிர்த்துள்ளோம். பணவீக்கம் கட்டுக்குள் வரும்.
சில்லரை பரிமாற்றத்துக்கான டிஜிட்டல் கரன்சி இந்த மாதத்திலேயே வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.