< Back
தேசிய செய்திகள்
கர்நாடக முருக மடாதிபதி மீது மேலும் ஒரு வழக்கு: சமையல்கார பெண்ணின் மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
தேசிய செய்திகள்

கர்நாடக முருக மடாதிபதி மீது மேலும் ஒரு வழக்கு: சமையல்கார பெண்ணின் மகள்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

தினத்தந்தி
|
14 Oct 2022 5:00 AM GMT

கர்நாடகா சித்ரதுர்கா முருக மடத்தில் படிக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மடாதிபதி சிவமூர்த்தி முருக ஸ்ரீ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா முருக மடத்தின் விடுதியில் படிக்கும் இரண்டு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மடாதிபதி சிவமூர்த்தி முருக ஸ்ரீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசில் சரணடைந்த சிவமூர்த்தி முருகா, செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முருக ஸ்ரீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மடத்தில் சமையல் பணியாளராக இருந்த பெண் ஒருவர் புதிதாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

அந்த பெண், தனது மகள்களில் ஒருவரை காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்துச் சென்று, தனது இரண்டு மகள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.இது தவிர, மேலும் இரண்டு சிறுமிகள் உட்பட மொத்தம் நான்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில், சிறையில் உள்ள சிவமூர்த்தி முருக ஸ்ரீ மீது மைசூர் நசராபாத் காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கூடுதலாக, முருக மடத்தில் பணிபுரியும் ஊழியரின் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முருக மடத்தின் சீடர்கள் உட்பட 7 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதி வார்டன், சீடர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்