< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா: மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மடாதிபதி கைது

Image Courtacy: ANI

தேசிய செய்திகள்

கர்நாடகா: மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மடாதிபதி கைது

தினத்தந்தி
|
1 Sep 2022 6:11 PM GMT

கர்நாடகாவில் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஸ்ரீ முருகா மடத்து பீடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ரதுர்கா,

சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்த 2 மாணவிகளை, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் மடாதிபதி மீது பாலியல் புகார் கூறிய 2 மாணவிகள் சித்ரதுர்கா முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), சிவமூர்த்தி முருக சரணருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரி இருந்தது. மேலும் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஸ்ரீ முருகா மடத்து பீடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரை கர்நாடக போலீசார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்