காதல் விவகாரம்: இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற சகோதரர்கள் - அதிர்ச்சி சம்பவம்
|பழங்குடியின இளைஞரைக் காதலித்ததற்காக இளம்பெண்ணை அவரது சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்ரா,
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் பழங்குடியின இளைஞரைக் காதலித்ததற்காக 18 வயது தலித் பெண்ணை அவரது சகோதரர்கள் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக, சேதா கிராமத்தைச் சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவர், பழங்குடியின இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளைஞருடன் சகோதரி இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள் இருவரையும் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து இருவரையும் கோடரியால் கொல்ல முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற இளைஞர், பின்னர் திரும்பி பார்க்கும்போது, அவரது காதலி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகிலுள்ள சதார் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தலைமறைவான பெண்ணின் சகோதரர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.