< Back
தேசிய செய்திகள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றமா?; பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பதில்
தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றமா?; பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பதில்

தினத்தந்தி
|
10 Aug 2022 3:01 PM GMT

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றமா? என்பதற்கு பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பதில் தெரிவித்துள்ளார்.

மங்களூரு;

நளின்குமார் கட்டீல் பேட்டி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மட்டுமின்றி பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலரும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பா.ஜனதா மாநில தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கப்பிரிவு விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமார் ஆஜராகியுள்ளார். இதனால் காங்கிரசின் ஊழல்கள் வெளிப்படையாகி உள்ளது. இதில் மக்களை திசை திருப்பவே, கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாக கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றுவதற்கான சாத்தியமில்லை. அவரை மாற்றுவது குறித்து எந்த பேச்சும் நடக்கவில்லை. முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மையே நீடிப்பார்.

காங்கிரசில் உட்கட்சி பூசல்

காங்கிரசில் முதல்-மந்திரி வேட்பாளருக்கு போட்டி நிலவுகிறது.

குறிப்பாக தலித் முதல்-மந்திரியை முன்னிறுத்துவது குறித்த விவாதங்களை புறக்கணிக்க முயற்சிக்கின்றனர். சித்தராமோற்சவா விழாவுக்கு பிறகு காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கே.பி.கோலிவாட் போன்ற மூத்த தலைவர் சித்தராமையாவை வெளிப்படையாக விமர்சிக்கின்றனர்.

அதனால் கட்சி பிரச்சினைகள், மக்களுக்கு தெரியாமல் இருக்கவே முதல்-மந்திரி மாற்றம் என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் காங்கிரசின் ஆட்டம் பலிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்