< Back
தேசிய செய்திகள்
குஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை

தினத்தந்தி
|
11 Sep 2022 4:10 PM GMT

வரும் வாரங்களில் வலதுசாரி அமைப்புகள், தலைவர்கள் மீது பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

காந்திநகர்,

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன், பில்கிஸ் பானோவின் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை திரும்பப் பெறக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் 'இஸ்லாமிக் ஸ்டேட் கொராசன் பிரதேசம்' (ஐஎஸ்கேபி) திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி வலதுசாரி தலைவர்களை தாக்க பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளன. 'இஸ்லாமிக் ஸ்டேட் கொராசன் பிரதேசம்' (ஐஎஸ்கேபி)

பில்கிஸ் பானோவின் தண்டனைக் கைதிகளை விடுவித்த நடவடிக்கையை மையப்படுத்தி குஜராத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஐஎஸ்கேபி திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

வரும் வாரங்களில் இளைஞர்கள் வலதுசாரி அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆக்கிரமித்ததில் இருந்து, ஐஎஸ் ஆதரவு பயங்கரவாத குழுவான ஐஎஸ்கேபி, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லக்சர்-இ-தொய்பா போராளிக் குழுவின் உதவியுடன் இந்தியாவில் தனது சொந்த படைகளை உருவாக்க முயற்சித்து வருகிறது.இந்தியாவில் உள்ள இளைஞர்களை பணியில் சேர்க்க பயங்கரவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் குஜராத்தில் அமைதியின்மை ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைவருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரான தற்கொலைப்படை நபரை சமீபத்தில் ரஷிய மத்திய பாதுகாப்பு சேவை கைது செய்தது. பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த விரிவான திட்டங்கள் குறித்து ரஷிய அதிகாரிகள் உதவியுடன் உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்