< Back
தேசிய செய்திகள்
பொருளாதார நெருக்கடியில் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
21 July 2023 7:41 AM GMT

பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்துள்ள அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்பின்னர் இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை, யுபிஐ பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் கையெழுத்தாகியது.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

கடல்வழி, விமானப் போக்குவரத்து, எரிசக்தி வர்த்தகம், சுற்றுலாத்துறை, திறன் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் 2 நாடுகளின் உறவு மிக முக்கியம். இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும்.

இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் முதல் இலங்கையின் காங்கேசன்துறை இடையே, பயணிகளுக்கான கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்