< Back
தேசிய செய்திகள்
ஹனிடிராப் முறையில் பணம் பறிப்பு: மும்பை மாடல் அழகி உள்பட 4 பேர் கைது
தேசிய செய்திகள்

'ஹனிடிராப்' முறையில் பணம் பறிப்பு: மும்பை மாடல் அழகி உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி
|
16 Aug 2023 6:45 PM GMT

பெங்களூருவில் ஹனிடிராப் முறையில் பணம் பறித்து வந்த மும்பை மாடல் அழகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீட்டுக்கு வருபவர்களை பிகினி உடையில் வரவேற்று கிளுகிளுப்பாக பேசி வீடியோ எடுத்து மிரட்டி கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் ஹனிடிராப் முறையில் பணம் பறித்து வந்த மும்பை மாடல் அழகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீட்டுக்கு வருபவர்களை பிகினி உடையில் வரவேற்று கிளுகிளுப்பாக பேசி வீடியோ எடுத்து மிரட்டி கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

ஹினிடிராப் கும்பல்

பெங்களூருவில் ஹனிடிராப் முறையில் தொழில் அதிபர்கள், வாலிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுபோல், மற்றொரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் வசிக்கும் ஒரு வாலிபர் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ஹனிடிராப் முறையில் தன்னை மிரட்டி ஒரு இளம்பெண் உள்பட 4 பேர் பல லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டதாக கூறி இருந்தார்.

இதையடுத்து, அந்த கும்பலை பிடிக்க புட்டேனஹள்ளி போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஹனிடிராப் கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாசின் ஆகிய 3 பேரையும் முதலில் கைது செய்தார்கள். அப்போது இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது மாடல் அழகி என்பது தெரியவந்தது.

மாடல் அழகி கைது

அதாவது மும்பையை சேர்ந்த மாடல் அழகியான நேகா என்ற மகர் தான் ஹனிடிராப் முறையில் தொழில்அதிபர்கள், வாலிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்றனர். பின்னர் மும்பையில் தலைமறைவாக இருந்த மாடல் அழகி நேகாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது சமூக வலைதளங்களில் வசதி படைத்தவர்கள், தொழில்அதிபர்களை அடையாளம் கண்டு டெலிகிராம் செல்போன் செயலி மூலமாக அவர்களை நேகா தொடர்பு கொள்வார். பின்னர் அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க ஜே.பி.நகர் 5-வது ஸ்டேஜில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு நேகா வரவழைப்பார்.

பிகினி உடையில் வரவேற்பு

அவ்வாறு தன்னுடைய வீட்டுக்கு வருபவர்களை வாசலில் வைத்தே பிகினி உடை அணிந்து கொண்டு நேகா வரவேற்று உள்ளே அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் தனது வீடு முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை அவர் பொருத்தி வைத்திருந்தார். வீட்டுக்கு வருபவர்களை பிகினி உடையில் கட்டி அணைத்து நேகா அழைத்து செல்வது கேமராவில் பதிவானதும், வீட்டுக்குள் அமர்ந்து அவர்களுடன் கிளுகிளுப்பாக பேசிக் கொண்டிருப்பதையும் மற்ற 3 பேரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பார்கள்.

அந்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறிப்பதை நேகா உள்பட 4 பேரும் தொழிலாக வைத்திருந்தார்கள். இதுவரை தொழில்அதிபர்கள், வாலிபர்கள் என 12 பேரை ஹனிடிராப் முறையில் சிக்க வைத்து ரூ.30 லட்சம் வரை நேகா பறித்திருந்தார். அவரது செல்போனில் இருந்து பிகினி உடையில் வாலிபர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான மாடல் அழகி உள்பட 4 பேர் மீதும் புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்