< Back
தேசிய செய்திகள்
ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை!
தேசிய செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: வாரணாசி கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை!

தினத்தந்தி
|
4 July 2022 5:14 AM GMT

ஞானவாபி மசூதி வழக்கு மீதான விசாரணை, வாரணாசி கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

வாரணாசி,

ஞானவாபி மசூதி விவகாரம் மீதான வழக்கு விசாரணை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஞானவாபி மசூதி வழக்கு மீதான விசாரணை, வாரணாசி கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மே 20 அன்று, சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை சிவில் நீதிபதி நீதிமன்றத்தில் இருந்து வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றி, அதன் மசூதி பராமரிப்பு குறித்த விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் முஸ்லீம் தரப்பு வாதங்களை, வாரணாசி மாவட்ட கோர்ட் கடந்த மே 24ஆம் தேதி விசாரிக்கத் தொடங்கியது. மே 30ந்தேதி விசாரணைக்கு பின், ஜூலை 4 வரை விசாரணையை கோர்ட்டு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், வாரணாசி மாவட்ட கோர்ட்டில், முஸ்லிம் தரப்பு தாக்கல் செய்த பராமரிப்பு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி எதிர்தரப்பின் மனுவை எதிர்த்து, மசூதி பராமரிப்பு குழு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று இந்து தரப்பு வழக்கறிஞர் வி ஜெயின் கூறினார்.


கடந்த மாதம், விஸ்வ வைதிக் சனாதன சங்கத்தின் (விவிஎஸ்எஸ்) தலைவர் ஜிதேந்திர சிங் விசென் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில் வழிபாட்டு தல சட்டத்தின் கீழ், அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் (ஏஐஎம்) கமிட்டி மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மசூதி கமிட்டி, ஞானவாபி வளாகத்தில் உள்ள விஷேஷ்வர் கோயிலின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்த முயற்சித்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

இது தவிர, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஞானவாபி வளாகத்தில் நுழைவதை தடை செய்யக் கோரி வி.வி.எஸ்.எஸ் தலைவர் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஞானவாபி மசூதி விவகாரம் சற்று தணிந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை மூலம் மீண்டும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்