< Back
தேசிய செய்திகள்
ஸ்ரீநகரில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி மோசடி செய்தவர் கைது
தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி மோசடி செய்தவர் கைது

தினத்தந்தி
|
17 March 2023 8:02 AM GMT

பிரதமர் அலுவலக உயர் அதிகாரி என்று கூறி ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீநகர்,

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண் பாய் படேல். இவர் பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறி காஷ்மீருக்கு இந்த ஆண்டு 2 முறை சென்றுள்ளார். அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் தங்க வைத்து குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பும் காஷ்மீர் மாநில நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் முதல் முறையாக சென்ற அவர் அந்த மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். துணை ராணுவ படையினர் புடைசூழ பல இடங்களை சுற்றி பார்த்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குஜராத் மாநில பா.ஜ.க. பொது செயலாளர் பிரதீப் சிங் பகேலா உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிவிட்டரில் இவரை பின் தொடர்பவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மீண்டும் அவர் ஸ்ரீநகருக்கு வந்தார். அவர் மீது சந்தேகமடைந்த கலெக்டர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரகசியமாக வைத்திருந்த நிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்