
கோப்புப்படம்
ஒடிசாவில் வகுப்பறை கதவை கரும்பலகையாக பயன்படுத்திய அரசு பள்ளி - விளக்கம் கேட்டு நோட்டீஸ்

வகுப்பறையின் கதவில் வினாக்களை எழுதி பயன்படுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஆண்டியா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு நடந்தது. அப்போது வினாத்தாள்களை கொடுப்பதற்கு பதிலாக ஆசிரியர் வகுப்பறையின் கதவில் வினாக்களை எழுதினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அனுப்பும்படி பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஜாஜ்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கையில், எங்களது பள்ளியில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. 1 முதல் 8-ம் வகுப்பு வரை மட்டும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். கரும்பலகைக்கு பதிலாக வகுப்பறை கதவில் வினாக்களை எழுதியதாக கூறப்படுவது உண்மை இல்லை என பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி பாண்டா கூறியுள்ளார். இப்பள்ளி கடந்த ஆண்டு சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சிக்கான '5டி' விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.