< Back
தேசிய செய்திகள்
ஞானவாபி மசூதி வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம்
தேசிய செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம்

தினத்தந்தி
|
24 May 2022 2:23 AM GMT

ஞானவாபி மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.

வாரணாசி,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றததில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் வீடியோ ஆய்வு பணிகளை நடத்தியது.

அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது.

இதை அடுத்து ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று மதியம் இந்த வழக்கு, வாராணசி மாவட்ட கோர்ட்டில் மூத்த நீதிபதி ஏ கே விஷ்வேஷா முன்பு விசாரணைக்கு வந்தது. ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை நேற்று நிறைவு செய்தது.

இந்நிலையில், ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக இருதரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 3 மனுக்களை வாரணாசி நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. இந்த விசாரணையின் போது நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுதான், இவ்வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.

மேலும் ஆணையரின் ஆய்வறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே இன்றைய வழக்கின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்