< Back
தேசிய செய்திகள்
தண்ணீருன்னா பயம்... மூதாட்டியை கொலை செய்து நரமாமிசம் சாப்பிட்ட வாலிபரால் பரபரப்பு
தேசிய செய்திகள்

தண்ணீருன்னா பயம்... மூதாட்டியை கொலை செய்து நரமாமிசம் சாப்பிட்ட வாலிபரால் பரபரப்பு

தினத்தந்தி
|
28 May 2023 12:10 PM GMT

ராஜஸ்தானில் 24 வயது வாலிபர் ஒருவர் 65 வயது மூதாட்டியை கொலை செய்து நரமாமிசம் சாப்பிட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் சாராதனா கிராமத்தில் சாந்தி தேவி (வயது 65) என்ற மூதாட்டி கால்நடைகளை ஓட்டி கொண்டு, புல் மேய்க்க சென்று உள்ளார்.

இந்த நிலையில், ஆடுகளை மேய்த்து விட்டு அந்த வழியே வந்த தேவியின் மகன் பைரன் கதட், வயல்வெளியில் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது.

ஒரு நபர் சாந்தி தேவியின் உடலில் இருந்து ஒரு பகுதியை எடுத்து உணவாக தின்றுள்ளார். இதனால், மிரண்டு போன கதட் அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார்.

அந்த நபரின் முகமெல்லாம் ரத்தாம் படிந்து இருந்தது என கதட் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் போலீசாரிடம் கூறியுள்ளார். புகாரும் அளித்து உள்ளார்.

இந்த நபரை பார்த்து மற்ற கிராமவாசிகளும் மிரண்டு போயிருந்தனர். ஆனால், அந்த நபர் தப்பியோட முயன்றபோது, விரட்டி சென்று, அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

அவரிடம் நடந்த விசாரணையில், அந்த நபரின் பெயர் சுரேந்திரா தாக்குர் (வயது 24) என்பது தெரிய வந்தது. மும்பையை சேர்ந்த அந்நபர், பஸ்சில் சென்டிரா பகுதிக்கு வந்துள்ளார். அவரிடம் இருந்த பயண சீட்டில் இருந்து இந்த விவரம் தெரிய வந்தது.

சுரேந்திராவுக்கு, ஹைடிரோபோபியா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவர் சிகிச்சை பெற்று வரும் பங்கர் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ரேபிஸ் தொற்று ஏற்பட்டவருக்கு முற்றிய நிலையில், தண்ணீர் என்றால் பயம் ஏற்படும். கடந்த காலத்தில் சுரேந்திராவை ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளான நாய் கடித்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதற்கு அவர் தடுப்பூசியோ, தக்க சிகிச்சையோ பெறாமல் இருந்திருக்க கூடும் என மருத்துவர் பிரவீன் கூறுகிறார்.

சுரேந்திரா, மனநலம் பாதித்த நோயாளி போல் நடந்து கொள்கிறார். ஆவேசமுடன் காணப்படுகிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. மருத்துவமனையில் கூட அவர் அமளியில் ஈடுபட்டார் என போலீஸ் துணை சூப்பிரெண்டு சுக்ராம் பிஷ்னோய் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை நடந்த அந்த பெண்ணின் உடல் அவரது குடும்பத்தினரிடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

மேலும் செய்திகள்