< Back
தேசிய செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
தேசிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

தினத்தந்தி
|
9 March 2024 5:57 AM GMT

சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி, அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்தாள். தந்தை கண்டித்தும் சிறுமி செல்போன் உபயோகிப்பதை நிறுத்தவில்லை. இதனால் சிறுமியின் தந்தை போலீசின் உதவியை நாடினார். போலீஸ் அதிகாரியை சந்தித்து மகள் செல்போனில் மூழ்கி கிடப்பதாகவும், பெற்றோர் பேச்சை கேட்பதில்லை எனவும் கூறி கவுன்சிலிங் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதன்பேரில் போலீசார் சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவத்தன்று சிறுமியின் தந்தை தனது மகள் மற்றும் மனைவியை அழைத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றார். அங்கு போலீசார் செல்போன் மூலமாக நடைபெறும் குற்றசம்பவங்கள் குறித்து சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்கினர். மேலும் சிறுமியிடம் அவர் வேறு ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறாரா? என விசாரித்தனர்.

இதில் கடந்த ஓராண்டாக தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தி வருவதாக சிறுமி தெரிவித்தாள். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியின் தந்தையை பிடித்து விசாரித்ததில் சிறுமி கூறியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்