ஊழல் வழக்கு: முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டுகள் சிறை - உடனடியாக ஜாமின்
|ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பக்வான் சிங். முன்னாள் மந்திரியான இவர் 1999-ம் ஆண்டு கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.
அந்த சமயத்தில் பெண்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து மோசடி செய்ததாக 2004-ம் ஆண்டு கூட்டுறவு வங்கி அதிகாரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் பக்வான் சிங் கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தபோது அந்த பணத்திற்கு ஒப்புதல் அளித்ததும், மேலும் 72 லட்ச ரூபாய் அளவிற்கு பணமோசடி நடைபெற்றதும் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பக்வான் சிங் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
குற்றவாளிகள் பக்வன் சிங், டிகே ஜெயின் ஆகிய 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், மேலும் 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட உடன் பகவன் சிங், டிகே ஜெயின் ஆகிய 2 பேருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. எஞ்சிய 4 பேரும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.