< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு

தினத்தந்தி
|
7 Nov 2022 8:08 PM GMT

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓய்வுபெறுகிறார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓய்வுபெறுகிறார். இதனையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதில் யு.யு.லலித் பேசுகையில், 'சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி பொறுப்பை, மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தபோது அவருடைய தந்தையான சுப்ரீம் கோர்ட்டின் 16-வது தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் முதன்முதலில் முறையிட்டது நினைவுக்கு வருகிறது. 37 ஆண்டுகள் வாழ்க்கை பயணத்தை இந்த சுப்ரீம் கோர்ட்டில் கழித்துள்ளேன். எனது பதவி காலத்தில் ஒரே நேரத்தில் மூன்று அரசியல் சாசன அமர்வு செயல்பட்டது மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வாகும். என்னால் இயன்றதை வக்கீல்களுக்கு செய்து உள்ளேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன்' என்றார்.

விழாவில் மத்திய அரசின் தலைமை வக்கீல் ஆர்.வெங்கடரமணி, மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். மாலையில் வக்கீல் சங்கங்கள் சார்பில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய யு.யு.லலித், 'எனது 74 நாட்கள் பதவிக்காலத்தில் 10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். 6 அரசியல் சாசன அமர்வுகளை அமைத்துள்ளேன். எனது பணி மனநிறைவை தந்துள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்