< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

டி.கே.சிவக்குமார்- சித்தராமையாவுடன் கார்கே தனித்தனியாக ஆலோசனை

தினத்தந்தி
|
16 May 2023 9:32 PM GMT

முதல்-மந்திரி பதவி கேட்டு டி.ேக.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் போர்க்கொடி தூக்குவதால் அவர்களை கார்கே தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் முதல்-மந்திரி தேர்வு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

முதல்-மந்திரி பதவி கேட்டு டி.ேக.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் போர்க்கொடி தூக்குவதால் அவர்களை கார்கே தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் முதல்-மந்திரி தேர்வு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்-மந்திரி பதவி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 14-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கருத்துக்களை சீட்டு மூலம் ரகசியமாக தெரிவித்தனர்.

அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கையாக தயாரித்த மேலிட பார்வையாளர்கள், டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து தாக்கல் செய்தனர். முதல்-மந்திரி பதவியை தனக்கு தான் வழங்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் பிடிவாதமாக உள்ளனர். அதனால் காங்கிரஸ் மேலிடம், யாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

2-வது நாளாக ஆலோசனை

இதையடுத்து இருவரையும் டெல்லிக்கு வரும்படி கட்சி மேலிடம் அழைப்பு விடுத்தது. அதன்படி சித்தராமையா நேற்று முன்தினமே டெல்லி சென்றுவிட்டார். அவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து, தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியே தீர வேண்டும் என்று கூறி கோரிக்கையை முன்வைத்தார். அங்கு தலைவர்கள் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர். டி.கே.சிவக்குமார் கடைசி நேரத்தில் டெல்லி பயணத்தை ரத்து செய்ததால், முதல்-மந்திரி யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நேற்று 2-வது நாளாக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே கட்சி மேலிடத்தின் அழைப்பின் பேரில் டி.கே.சிவக்குமார் நேற்று காலை 9.50 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் சில ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். பகல் 1 மணியளவில் டெல்லி சென்ற அவர், அங்கிருந்து தனது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. வீட்டிற்கு சென்றார். அங்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்ட டி.கே.சிவக்குமார் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டிற்கு மாலை 5.15 மணிக்கு சென்று அவரை சந்தித்தார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பின்போது, முதல்-மந்திரி பதவி விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சித்தராமையா- டி.கே.சிவக்குமார் பிடிவாதம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தான் மேற்கொண்ட பணிகளை அவர் பட்டியலிட்டார். அதே நேரத்தில் கட்சியை பலப்படுத்த சித்தராமையா என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறி சித்தராமையா தான் காரணம் என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை அனுபவித்துள்ளார், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் 2 முறை இருந்துள்ளார் என்றும், அதனால் இந்த முறை தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்றும் பிடிவாதமாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மீண்டும் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, டி.கே.சிவக்குமார் கூறிய அம்சங்களை அவரிடம் மல்லிகார்ஜுன கார்கே எடுத்து கூறியுள்ளார். அதற்கு சித்தராமையா, சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், தனது செல்வாக்கால் தான் தலித், முஸ்லிம், லிங்காயத் மற்றும் குருபா உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்ததாகவும், தேர்தல் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற உள்ளதால் தனக்கு இந்த முறை முதல்-மந்திரி பதவி வழங்கியே தீர வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாக மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு வாய்ப்பு?

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இருவரையும் சந்திப்பதற்கு முன்னதாக மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவில் டி.ேக.சிவக்குமாருடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து ராகுல்காந்தியுடன் கே.சி.வேணுகோபால் விளக்கினார்.

இவ்வாறு கர்நாடக முதல்-மந்திரி தேர்வு விவகாரத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மாறி, மாறி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. இதனால் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் இறுதி முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். இதன்காரணமாக கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

அநேகமாக இந்த விவகாரத்தில் இன்று (புதன்கிழமை) இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாளை (18-ந்தேதி) அல்லது 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்