< Back
தேசிய செய்திகள்
மந்திரிகள் மீது எந்தவொரு எம்.எல்.ஏ.வுக்கும் அதிருப்தி இல்லை; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

மந்திரிகள் மீது எந்தவொரு எம்.எல்.ஏ.வுக்கும் அதிருப்தி இல்லை; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
2 Sep 2023 6:45 PM GMT

மந்திரிகள் மீது எந்தவொரு எம்.எல்.ஏ.வுக்கும் அதிருப்தி இல்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு:

மந்திரிகள் மீது எந்தவொரு எம்.எல்.ஏ.வுக்கும் அதிருப்தி இல்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆனாலும் மந்திரி பதவி கிடைக்காத மூத்த எம்.எல். ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை என்று கூறி கடந்த ஒருமாதத்திற்கு முன்பு மூத்த எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்கள்.

இப்பிரச்சினை குறித்து மூத்த எம்.எல்.ஏ. முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நேரடியாக கடிதம் எழுதினர். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கட்சி விரோத செயல்களில்...

காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கும், மந்திரிகள் மீது அதிருப்தி இல்லை. மந்திரிகள் மீது அதிருப்தி இருப்பதாக எந்த எம்.எல். ஏ.வும் சொல்லவில்லை. இதுபோன்ற, தேவையில்லாத பிரச்சினைகள் உருவாக்கப்படுகிறது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதியில் பிரச்சினை மற்றும் சொந்த விவகாரங்கள் தொடர்பாக பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சினைகளை எம்.எல்.ஏ.க்கள் கூறுவதில் தவறு இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஒழுக்கத்தை பின்பற்றுவது கட்டாயமாகும். கட்சி விரோத செயல்களில் யாரும் ஈடுபட முடியாது. அதற்கான அனுமதியும் வழங்கப்படாது. எங்கள் கட்சி(காங்கிரஸ்) எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஒழுக்கத்தை மீறி நடந்து கொள்வதில்லை.

மாற்று ஏற்பாடுக்கு முடிவு

பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டத்தின் காரணமாக தனியார் பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை தான். தனியார் வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக வருகிற 11-ந் தேதி தனியார் பஸ் மற்றும் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டியுடன் பேச்சு வார்த்தை நடத்துவேன். தனியார் பஸ் மற்றும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்