< Back
தேசிய செய்திகள்
டெல்லி: கிறிஸ்தவ பாதிரியாருக்கு நாணயம் பரிசளித்த அமெரிக்க அதிபர் பைடன்
தேசிய செய்திகள்

டெல்லி: கிறிஸ்தவ பாதிரியாருக்கு நாணயம் பரிசளித்த அமெரிக்க அதிபர் பைடன்

தினத்தந்தி
|
10 Sep 2023 11:28 AM GMT

டெல்லி ஆர்ச்டயோசீஸை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாருக்கு அமெரிக்க அதிபர் பைடன் நாணயம் பரிசளித்து சென்றார்.

புதுடெல்லி,

டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அவர் மாநாட்டில் பேசும்போது, உண்மையில் இது ஒரு பெரிய விசயம். பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்பதே இந்த ஜி-20 உச்சி மாநாட்டின் மைய விசயம். மற்றும் பல வழிகளில், இன்று நாம் பேசி கொண்டிருக்கும் நட்புறவுக்கான மையமும் கூட என்று கூறினார்.

நீடித்த, உறுதியான உள்கட்டமைப்பு, தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை உருவாக்குவது மற்றும் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டை முடித்து கொண்ட பைடன் பின்னர், வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பு (ஆர்ச்டயோசீஸ்) ஒன்றின் பாதிரியாராக நிகோலஸ் டயஸ் உள்ளார். அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சேர்ந்து, இறைவணக்கத்தில் ஈடுபட்டார். அதிபர் பைடன் புறப்பட்டு செல்லும் முன், கிறிஸ்தவ பாதிரியார் டயசுக்கு நாணயம் ஒன்றை பரிசளித்து உள்ளார்.

இதுபற்றி பாதிரியார் டயஸ் கூறும்போது, அதிபருடன் சேர்ந்து ஜெபம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்டது, எனக்கு ஒரு சிறந்த தருணம். அவருக்காக வேண்டி கொண்டேன். நம்முடைய நாட்டுக்காகவும் கூட வேண்டி கொண்டேன். என்னுடைய அனுபவத்தில், அவர் சமய பற்று கொண்ட கத்தோலிக்கர். போப் பிரான்சிஸ் மற்றும் அவருடைய போதனைகளை தீவிரத்துடன் பின்பற்ற கூடியவர். அவற்றை எப்படி தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பதவியில் அமல்படுத்தலாம் என முயற்சித்து பார்க்க கூடியவர்.

அவருடைய நம்பிக்கையானது எனக்கும், என்னுடைய நம்பிக்கைக்கும் ஓர் அனுபவம். அவர் மிக பணிவானவராக வந்து சென்றார். எனக்கு அவர் நன்றிக்குரியவர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே கொடுக்க கூடிய நினைவு பரிசை அவர் எனக்கு கொடுத்து சென்றார். அதனை நான் நினைத்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

அந்த நாணயத்தில் 261 என்ற எண் உள்ளது. இதற்கு முன்பு 260 பேருக்கு மட்டுமே இந்த கவுரவம் கிடைத்து உள்ளது என்பது எனக்கு தெரியும் என்றும் பாதிரியார் டயஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்