< Back
தேசிய செய்திகள்
அனல்மின் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு-மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்
தேசிய செய்திகள்

அனல்மின் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு-மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்

தினத்தந்தி
|
16 Aug 2023 9:38 PM GMT

கர்நாடகத்தில் அனல்மின் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

சிக்கமகளூருூ

மழை குறைவாக பெய்துள்ளது

சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில மின்சார துறை மந்திரியுமான கே.ஜே.ஜார்ஜ், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சிக்கமகளூருவுக்கு வந்தார். அவர் சிக்கமகளூருவில் அரசு சார்பில் நடந்த வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவற்றை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது. ஆகையால் மழை காலத்தில் மட்டுமே நீர்மின் நிலையங்கள் மூலம் நமக்கு போதுமான மின்சாரம் கிடைக்கும். அதன்காரணமாக இந்த ஆண்டு அனல்மின் நிலையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சோலார் மூலம் மின்சாரம்

நிலக்கரி பற்றாக்குறையும் இருந்து வருகிறது. இருப்பினும் நிலக்கரி பற்றாக்குறையை இன்னும் 10 நாட்களில் சரி செய்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலக்கரி பற்றாக்குறை சரி செய்யப்பட்டால் அனல்மின் நிலையங்கள் மூலம் கூடுதல் மின்சாரத்தை பெற முடியும்.

இதுதவிர சோலார் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது பழுதாகி இருக்கும் சோலார் மின்தகடுகளை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் பற்றாக்குறையை ஈடுகட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மின்சார தட்டுப்பாடு பிரச்சினை

இதுதவிர ஆதரவாக 10 ஏக்கர், 20 ஏக்கர், 30 ஏக்கர் நிலங்களில் சோலார் மின்தகடுகள் அமைத்து அதன்மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்

காற்றாலை மின் உற்பத்தி மூலமும் மின்பற்றாக்குறையை ஈடுகட்ட திட்டமிட்டுள்ளோம். விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு சோலார் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்