< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் - மதுசூதன் மிஸ்திரி
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் - மதுசூதன் மிஸ்திரி

தினத்தந்தி
|
30 Sep 2022 12:18 PM GMT

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய்சிங் (75), தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக திக்விஜய சிங் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மல்லிகார்ஜுன கார்கே 14 படிவங்களளை தாக்கல் செய்துள்ளார். சசி தரூர் 5 படிவங்களும், கே.என் திரிபாதி ஒரு படிவமும் தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை நாளை பரிசீலனை செய்து, நாளை மாலை வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம். தேர்தலில் போட்டியிடும் 3 பேரில் யாரும் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை. அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள்.

கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையில் நடுநிலை வகிப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் அவரது ஆதரவு உள்ளது என கூறினால் அது தவறானது எனஅவர் மிக தெளிவாக கூறி உள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்