பஞ்சாப்பில் காலை 7.30 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த முதல்-மந்திரி... காரணம் என்ன?
|பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மன் இன்று காலை 7.30 மணிக்கு அலுவலகத்திற்கு வருகை தந்து மற்ற அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில் முதல்-மந்திரியாக பகவந்த் மன் செயல்பட்டு வருகிறார். அவர், இன்று காலை 7.30 மணிக்கு அலுவலகத்திற்கு வருகை தந்து அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
பஞ்சாப்பில், கோடை காலம் தொடங்கிய நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களையும் காலை 7.30 மணிக்கு தொடங்க அரசு எடுத்து உள்ளது. இதன்படி, மதியம் 2 மணி வரை பணி நடைபெறும்.
இந்த நடைமுறை வருகிற ஜூலை 15-ந்தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும். இதனால், அரசு அலுவலகத்திற்கு வந்த முதல் நபர்களில் ஒருவராக பகவந்த் மன் இருக்கிறார்.
அவருடன் பஞ்சாப் மந்திரிகள் அமன் அரோரா, பிரம்ம சங்கர் ஜிம்பா, ஹர்பஜன் சிங் மற்றும் குல்தீப் சிங் தலிவால் உள்ளிட்டோரும் காலை 7.30 மணியளவில் அவர்களுடைய அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
இதுபற்றி ஊடகங்களுக்கு பவகந்த் மன் அளித்த பேட்டியில், இந்த திட்ட நடைமுறை தொடங்கி இருப்பது மின்சாரம் சேமிப்புக்கு உதவும். எங்களுக்கு மின் பற்றாக்குறை இல்லாதிருந்தபோதும், ஒரு நாளில் இந்த திட்டத்தினால் 350 மெகா வாட் மின்சாரம் சேமிக்க முடியும் என கூறியுள்ளார்.
இந்த மின் சேமிப்பு குறைப்பை தொடர்ந்து கண்காணித்தோம் என்றால், மாதம் ஒன்றிற்கு ரூ.16 முதல் ரூ.17 கோடி வரை சேமிக்கப்படுவது உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க விரும்பினேன். அதனாலேயே நான் காலை 7.28 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.