< Back
தேசிய செய்திகள்
பலிகொடுத்த ஆட்டின் கண்ணால் பலியான நபர் - விநோத சம்பவம்
தேசிய செய்திகள்

பலிகொடுத்த ஆட்டின் கண்ணால் பலியான நபர் - விநோத சம்பவம்

தினத்தந்தி
|
4 July 2023 1:43 PM GMT

நினைத்தது நிறைவேறியதால் ஆட்டை பலி கொடுத்த நிலையில் அந்த ஆட்டின் கண்ணால் அவரே உயிரிழந்தார்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பகர் சாய் (வயது 50). இவர் தான் நினைத்தது நிறைவேறிவிட்டால் ஆட்டை பலி கொடுக்கிறேன் என்று தனது கடவுளிடம் வேண்டியுள்ளார்.

இதனிடையே, பகர் சாய் வேண்டுதல் நிறைவேறிய நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினருடன் மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளார். அங்கு தான் நினைத்தது நிறைவேறியதையடுத்து கடவுளுக்கு ஆட்டை பழிகொடுத்து வழிபாடு செய்துள்ளார்.

பின்னர், பலிகொடுக்கப்பட்ட ஆட்டை கிராமத்தினர் சமைத்துள்ளனர். சமைக்கப்பட்ட இறைச்சி கறியை கிராமத்தினர் மத வழிபாட்டு தலத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, பகர் சாய் சமைக்கப்பட்ட தனது ஆட்டின் கண்ணை சாப்பிட்டுள்ளார். ஆட்டின் கண்ணை அவர் விழுங்கிய நிலையில் அது பகர் சாயின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால், அவரால் மூச்சு விட முடியவில்லை. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பகர் சாயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

வேண்டுதல் நிறைவேறியதால் ஆட்டை பலிக்கொடுத்த நிலையில் அந்த ஆட்டின் கண்ணை சாப்பிட்ட பகர் சாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்