< Back
தேசிய செய்திகள்
போபால் விஷவாயு கசிவு: கூடுதல் இழப்பீடு கோரும் வகையில் வழக்கை நடத்துவோம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

போபால் விஷவாயு கசிவு: கூடுதல் இழப்பீடு கோரும் வகையில் வழக்கை நடத்துவோம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
11 Oct 2022 8:14 PM GMT

போபால் விஷவாயு கசிவால் கூடுதல் இழப்பீடு கோரும் வகையில் வழக்கை நடத்துவோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவால் பேரழிவு ஏற்பட காரணமாக இருந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளராக டாவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் கூடுதல் இழப்பீடாக ரூ.7 ஆயிரத்து 400 கோடி வழங்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு கடந்த மாதம் 20-ந்தேதி விசாரித்தது. சீராய்வு மனு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் அரசியல்சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் தலைமை வக்கீல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி, போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை தொடர்ந்து முன்னெடுக்க விரும்புவதாகவும், பெருந்துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை கைவிட முடியாது எனவும் தெரிவித்தார். அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

மேலும் செய்திகள்