< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவுகிறது - மத்திய சுகாதார குழுவினர் விரைவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவுகிறது - மத்திய சுகாதார குழுவினர் விரைவு

தினத்தந்தி
|
28 Oct 2022 8:11 PM GMT

கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவுவதால், மத்திய சுகாதார குழுவினர் விரைந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள வழுதானம் பகுதியில் உள்ள பண்ணைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் திடீரென செத்து மடிந்தன. இதையடுத்து இறந்த வாத்துக்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த சோதனையில் அவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள், கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள், கோழிகள் கொல்லப்பட்டன. நேற்றும் வாத்துகளை கொல்லும் பணி நடந்தது. பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை தொடர்ந்து நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் மத்திய சுகாதார குழுவை சேர்ந்த 7 பேர் ஆலப்புழைக்கு விரைந்து உள்ளனர்.

இதற்கிடையே கோட்டயம் மீனச்சல் பகுதியில் உள்ள பண்ணைகளில் பல பன்றிகள் திடீரென செத்தன. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பன்றி காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீனச்சல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடைவிக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து பன்றிகளை வெளியூர்களுக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்