< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி; ஒவைசி
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி; ஒவைசி

தினத்தந்தி
|
16 Aug 2022 9:09 AM GMT

காஷ்மீரில் இருந்து வெளியேற காஷ்மீரி பண்டிட்டுகள் விரும்புகின்றனர் என்று அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் துணை நிலை ஆளுனர் தலைமையில் அரசு செயல்பட்டு வருகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில், நடப்பு ஆண்டில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருந்த காஷ்மீரி பண்டிட்டுகள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சமீப நாட்களாக பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டை நடத்தியதில், காஷ்மீரில் பண்டிட்டுகள் படுகொலை மற்றும் தொலைக்காட்சி நடிகை படுகொலையுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதனால், சில நாட்களாக காஷ்மீரில் வன்முறை சம்பவம் குறைந்து இருந்தது. நாட்டில் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் நேற்று நடந்து முடிந்த நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் இன்று தெரிவித்து உள்ளனர்.

இந்த தாக்குதலில் அவரது சகோதரர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த நபர் சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரது சகோதரர் பிந்து குமார் சிகிச்சை பெற்று வருகிறார். ஆப்பிள் தோட்டத்தில் இருந்த குடிமக்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். நடப்பு ஆண்டில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 4 பேர் காஷ்மீரை சேராதவர்கள் ஆவர்.

இந்த தாக்குதல் பற்றி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஒவைசி இன்று கூறும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் துணை நிலை ஆளுனரை பா.ஜ.க. நியமித்தது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்பட்ட அரசானது வெற்றி பெற முடியவில்லை என நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பலன் தரவில்லை. காஷ்மீரி பண்டிட்டுகள் மீது காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது இது முதன்முறையல்ல. அவர்கள் (மத்திய அரசு) பாதுகாப்பு வழங்க தவறி விட்டனர். காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.

இந்த சம்பவம் ஆனது, பிரதமர் மோடி அரசின் தோல்விக்கு மற்றோர் எடுத்துக்காட்டு ஆகும். ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள காஷ்மீரி பண்டிட்டுகளின் வாழ்வை பாதுகாக்க தவறிய பெரும் பொறுப்பு பா.ஜ.க. மற்றும் மத்திய அரசையே சாரும் என்று ஒவைசி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்