< Back
தேசிய செய்திகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை 19ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை 19ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
15 March 2024 7:13 AM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டார்.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மனு தாக்கல் செய்தது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், பல தரப்பில் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், புலம்பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டால், அதை திரும்பப் பெற முடியாது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 190க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விசாரிக்கப்படும். வருகிற 19-ந்தேதி (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்