< Back
தேசிய செய்திகள்
30 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி - தெலுங்கானா முதல்-மந்திரி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

"30 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி" - தெலுங்கானா முதல்-மந்திரி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
31 Oct 2022 12:07 AM GMT

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார்.

ஐதராபாத்,

4 தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை பண ஆசை காட்டி கட்சி மாற தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தெலுங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறும் முனுகோடே ராவ் சட்டசபை தொகுதியில் நேற்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, எனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவ் பேசியதாவது:-

"டெல்லியில் இருந்து தரகர்களை பா.ஜனதா அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இங்கு வந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.100 கோடி விலை பேசி இழுக்க பார்க்கிறார்கள். ஆனால், உண்மையான மண்ணின் மைந்தர்களான நமது எம்.எல்.ஏ.க்கள் அதை நிராகரித்து விட்டனர்.

பா.ஜனதா 20 அல்லது 30 ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது. அதன்மூலம் எனது அரசை கவிழ்க்க விரும்புகிறது. அப்படியே தங்கள் விருப்பம்போல் தனியார்மயத்தை அமல்படுத்த நினைக்கிறது."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்