< Back
தேசிய செய்திகள்
மத்திய அரசு வெளியே சிங்கம், உள்ளே எலியாக இருக்கிறது - காங்கிரஸ் கடும் தாக்கு
தேசிய செய்திகள்

'மத்திய அரசு வெளியே சிங்கம், உள்ளே எலியாக இருக்கிறது' - காங்கிரஸ் கடும் தாக்கு

தினத்தந்தி
|
19 Dec 2022 11:50 PM GMT

சீனாவுடனான எல்லை மோதல் விவகாரத்தில் மத்திய அரசு வெளியே சிங்கமும், உள்ளே எலியுமாகவும் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

ஜெய்ப்பூர்,

அருணாசல பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்குமாறு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த விவாதத்துக்கு அனுமதிக்காததால், ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை நேற்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. ராஜஸ்தானின் அல்வாரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக கூறியதாவது:-

மோடி அரசு மிகுந்த வலிமையானது எனவும், யாரும் அவர்களது கண்களை கூட நேரடியாக பார்க்க முடியாது எனவும் மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால் எல்லைகளில் மோதலும், சர்ச்சைகளும் எழுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் உயிரிழந்த பிறகு, அந்த நாட்டு அதிபரை பல முறை மோடி சந்தித்து பேசியிருக்கிறார். சந்திப்புகளை நடத்தியிருக்கிறார், அவருடன் ஊஞ்சல் ஆடியிருக்கிறார். இதெல்லாம் நடந்த பிறகும், சீன எல்லையில் இந்த மோதல் நீடிக்கிறது? வெளியே அவர்கள் சிங்கம் போல பேசுவார்கள், ஆனால் அவர்களது செயல்பாடுகளை நீங்கள் பார்த்தால், ஒரு எலியைப்போலத்தான் இருக்கும்.

சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அதற்காக நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம், ஆனால் அவர்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு தயாராக இல்லை. எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடும் சீனாவை எதிர்க்க முடியாமல் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

நாங்கள் ஏதாவது சொன்னால் தேச விரோதிகள் என்று அழைக்கப்படுகிறோம். அவர்கள் இன்னும் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் உங்கள் நாய் கூட நாட்டிற்காக இறந்ததா?

ஒரு பக்க அறிக்கை

காங்கிரஸ் கட்சி எப்போதும் நாட்டுக்காக நின்றிருக்கிறது. நாடு விடுதலை பெறுவதற்கு அதன் ஏராளமான தலைவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

சீன அத்துமீறல் விவகாரத்தில் ராஜ்நாத் சிங் வெறும் ஒரு பக்க அறிக்கையை அளித்து விட்டு சென்று விட்டார். ஆனால் எல்லையில் என்ன நடக்கிறது? அரசு என்ன செய்கிறது? நமது எல்லை மற்றும் வீரர்களின் நிலை என்ன என்று விவாதிக்க விரும்புகிறோம். ஆனால் இந்த விவாதம் நடத்தாமல் ஏன் ஒளிந்து கொண்டு ஓடுகிறீர்கள்?

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்