< Back
தேசிய செய்திகள்
200-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி, பா.ஜ.க. தொண்டர்கள் கைது - டெல்லியில் பரபரப்பு
தேசிய செய்திகள்

200-க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி, பா.ஜ.க. தொண்டர்கள் கைது - டெல்லியில் பரபரப்பு

தினத்தந்தி
|
2 Feb 2024 11:13 AM GMT

டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் சதுக்கத்தை நோக்கி இரு கட்சிகளின் தொண்டர்களும் பேரணியாக செல்ல முயன்றனர்.

புதுடெல்லி,

சண்டிகரில் அண்மையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி எதையோ எழுதுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சண்டிகர் ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனிடையே மேயர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் கூறி பா.ஜ.க.வை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் பா.ஜ.க. அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கினர். அதே சமயம், டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசாங்கத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தொண்டர்கள், ஆம் ஆத்மி அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.

டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் சதுக்கத்தை நோக்கி இரு கட்சிகளின் தொண்டர்களும் பேரணியாக செல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போலீசார் தடுப்புகளை அமைத்து இரு கட்சிகளின் தொண்டர்களையும் தடுத்தனர். அந்த பகுதியில் கலவரம் ஏற்படாமல் தடுக்க சுமார் 1,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 150 பேர் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். முன்னதாக டெல்லி முதல்-மந்திரி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி ஆகியோர் பேரணி தொடங்குவதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தும் வரை அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர கட்சி தொண்டர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

மேலும் செய்திகள்