< Back
தேசிய செய்திகள்
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்: நான் எனது கடமையை தான் செய்தேன்போலீஸ் அதிகாரி பேட்டி
தேசிய செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தடுத்து நிறுத்தம்: 'நான் எனது கடமையை தான் செய்தேன்'போலீஸ் அதிகாரி பேட்டி

தினத்தந்தி
|
4 May 2023 7:47 PM GMT

மும்பை,

ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், நான் எனது கடமையை தான் செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 30-ந் தேதி அன்று, புனேவில் உள்ள ராஜ்பகதூர் மில்ஸ் பகுதி அருகே திறந்தவெளியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. இரவு 10 மணியை நெருங்கியதும் ஏ.ஆர்.ரகுமான் 'தில் சே' படத்தில் இடம்பெற்ற 'சைய்ய சைய்யா' பாடலை பாட தொடங்கியபோது போலீஸ் அதிகாரி ஒருவர் மேடையின் மீது ஏறி தன்னுடைய வாட்ச்சை காண்பித்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்தார். இசைக் கலைஞர்கள் சிலர் அதனை கவனிக்காமல் இசைத்துக் கொண்டிருக்கவே, அவர்கள் அருகில் சென்ற அவர் உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கூறினார்.

இதனைக் கண்ட அங்கிருந்த ரசிகர்கள், கூச்சலிட்டனர். பின்னர் ஏ.ஆர்.ரகுமான் போலீசாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையில் இருந்து இறங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. அந்த போலீசாருக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஏ.ஆர்.ரகுமானை போலீசார் அவமதித்து விட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் சாடி இருந்தார்.

இந்த நிலையில் சந்தோஷ் பாட்டீல் என்ற அந்த போலீஸ் அதிகாரி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒரு காவல்துறை அதிகாரியாக நான் என்னுடைய கடமையை தான் செய்தேன். இரவு 10 மணிக்கு மேல் பொது வெளியில் இசையை சத்தமாக ஒலிக்க விடக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகினேன். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்பதாலேயே மேடையில் ஏறி ஏ.ஆர். ரகுமான் மற்றும் பிற இசைக் கலைஞர்களிடம் நிறுத்துமாறு கூறினேன். அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்