< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் மற்றொரு மேகவெடிப்பு; நெடுஞ்சாலையில் புதையுண்ட வாகனங்கள்
தேசிய செய்திகள்

காஷ்மீரில் மற்றொரு மேகவெடிப்பு; நெடுஞ்சாலையில் புதையுண்ட வாகனங்கள்

தினத்தந்தி
|
9 July 2022 3:50 AM GMT

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் குந்தி வன பகுதியில் இன்று மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தோடா,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது.

மேகவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 48 பேர் காயமடைந்து உள்ளனர் என காஷ்மீரின் கந்தர்பால் பகுதியை சேர்ந்த தலைமை மருத்துவ அதிகாரி ஏ. ஷா கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

இந்த சூழலில், நிலைமை கட்டுக்குள் உள்ளது என இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்நிலையில், அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் இன்று காலை மீண்டும் மீட்பு பணியை தொடர்ந்து உள்ளனர். 6 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு பின்னர், நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்துள்ளதுடன், உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அனைத்து அதிகாரிகளும் தங்களுடைய மொபைல் போன்களை ஆன் செய்து வைத்திருக்கும்படியும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் புல்வாமா, குல்காம், சோபியான் மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட தெற்கு காஷ்மீரின் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு, கூடுதல் மருத்துவர்கள் மற்றும் துணைநிலை மருத்துவ பணியாளர்களையும் மற்றும் மருந்துகள், அவசரகால உதவி பொருட்களையும் பகல்காமுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து காஷ்மீரின் ஸ்ரீநகர், பந்திபோரா, பாராமுல்லா மற்றும் புத்காம் உள்ளிட்ட வடக்கு மற்றும் மத்திய காஷ்மீரின் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு, கூடுதல் மருத்துவர்கள் மற்றும் துணைநிலை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துகள், அவசரகால உதவி பொருட்களை பல்தல் பகுதிக்கு அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியுள்ளது.

இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கி வருகின்றன என தோடா எஸ்.பி. அப்துல் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்