< Back
தேசிய செய்திகள்
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி.. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு
தேசிய செய்திகள்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணி.. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
9 Oct 2023 9:56 AM GMT

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலின் உச்சகட்டமாக ஹமாஸ் இயக்கத்தினர் திடீரென இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடங்கினர். நேற்று முன்தினம் காலை காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாதிகள் தரைவழி, வான்வழி, கடல்வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல், பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு குழுவினர் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போஸ்டர்களை ஏந்தியபடி, முழக்கங்கள் எழுப்பினர். மதம் தொடர்பான முழக்கங்களையும் எழுப்பி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பஜ்ரங் தளம் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், உருவ பொம்மையையும் எரித்தனர்.

இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள இந்தியா, இந்த முறை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் இயக்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்