< Back
தேசிய செய்திகள்
திருமணத்தில் நடனமாடியதால் மனைவியை அடித்துக் கொன்ற இளைஞர்
தேசிய செய்திகள்

திருமணத்தில் நடனமாடியதால் மனைவியை அடித்துக் கொன்ற இளைஞர்

தினத்தந்தி
|
12 Jun 2023 7:09 AM GMT

திருமணத்தில் நடனமாடியது பிடிக்காததால் மனைவியை அடித்துக் கொன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்

ஒடிசா,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பைகாபாடா கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர சிங் (வயது 35). இவரது மனைவி ஷர்மிளா சிங் (30). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் அண்டைவிட்டுக்காரரின் திருமணத்துக்கு ஜோடியாக சென்றனர். அங்கு திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியாய் இருந்தனர்.

இதை பார்த்து உற்சாகமடைந்த ஷர்மிளாவும் அவர்களுடன் சென்று நடனமாடினார். இது ராமச்சந்திர சிங்குக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் திருமணம் முடிந்து இருவரும் வீட்டுக்கு திரும்பினர். அதனை தொடர்ந்து ராமச்சந்திர சிங், மனைவி ஷர்மிளாவிடம் 'திருமணத்தில் எதற்காக நடனமாடினாய்?' என கேட்டு அவரை கடுமையான சொற்களால் திட்டினார்.

இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராமச்சந்திர சிங் மனைவி ஷர்மிளாவை சரமாரியாக அடித்து, உதைத்தார்.

இதில் பலத்த காயமடைந்த ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ஷர்மிளா உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, ராமசந்திர சிங்கை கைது செய்த போலீசார் சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்