< Back
தேசிய செய்திகள்
நரபலி சம்பவம் எதிரொலியாக நடந்த தேடுதல் வேட்டையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு
தேசிய செய்திகள்

நரபலி சம்பவம் எதிரொலியாக நடந்த தேடுதல் வேட்டையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
22 Oct 2022 12:31 AM GMT

நரபலி சம்பவம் எதிரொலியாக நடந்த தேடுதல் வேட்டையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பாலக்காடு,

திருவனந்தபுரம் மாவட்டம் நல்லிகோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பெண், கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி காணாமல் போனார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். ஆனாலும் அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சமீபத்தில் கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் காணாமல் போன பெண்களின் பட்டியலை எடுத்து, அவர்களை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர்.

அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு காணாமல் போன நல்லிகோடு பகுதியை சேர்ந்த மேற்கண்ட பெண்ணை தேடும் பணியும் மீண்டும் தொடங்கப்பட்டது.

அதன் பயனாக அவர், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அவரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 2012-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண், வாலிபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவருடன் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு பகுதிக்கு சென்று குடும்பம் நடத்தியதும், அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெருந்தல்மன்னாவுக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் காணாமல் போன வேறு யாரேனும் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற அச்சத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்