< Back
தேசிய செய்திகள்
ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக புதிய செயல்குழு..!
தேசிய செய்திகள்

ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக புதிய செயல்குழு..!

தினத்தந்தி
|
9 Sep 2023 12:45 PM GMT

பெண்கள் முன்னேற்றத்திற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் புதிய செயல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் பொருளாதாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவும் பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் புதிய செயல் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள பிரேசில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்