< Back
தேசிய செய்திகள்
காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்
தேசிய செய்திகள்

காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

தினத்தந்தி
|
2 Sep 2023 6:45 PM GMT

எச்.டி.கோட்டையில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவா் படுகாயம் அடைந்துள்ளாா்.

எச்.டி.கோட்டை

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 36). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

இந்த நிலையில் சித்தராஜ், தனது நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது வாழை தோட்டத்துக்கு சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தராஜ், அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆனாலும், காட்டு யானை சித்தராஜை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் விளைநிலத்துக்கு சென்ற சித்தராஜ், திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் சித்தராஜை தேடி விளைநிலத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு சித்தராஜ் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து குடு்ம்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்