< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 8 விமான விபத்துகள்; மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 8 விமான விபத்துகள்; மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
2 Aug 2022 2:24 AM GMT

இந்தியாவில் 2019ம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளில் 8 விமான விபத்துகள் நடந்துள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,



நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே. சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 2019ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு ஜூலை 22ந்தேதி வரையிலான 3 ஆண்டுகளில் 8 விமான விபத்துகள் நடந்துள்ளன.

நாட்டில் 2019ம் ஆண்டில் ஒரே ஒரு விமான விபத்து ஏற்பட்டது. அது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடையது. 2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என 2 விமான நிறுவனங்களின் விமானங்கள் விபத்தில் சிக்கின.

2021ம் ஆண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களின் தலா ஒரு விமானம் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் 2 விமானங்கள் விபத்தில் சிக்கின என தெரிவித்து உள்ளார்.

நடப்பு 2022ம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரே ஒரு விமான விபத்து சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், 2022ம் ஆண்டின் மே 2ல் இருந்து ஜூலை 13 வரையிலான காலகட்டத்தில் திடீர் சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகரித்து உள்ளன என கூறியுள்ளார்.

இதேபோன்று, மத்திய விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகளால் 353 திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்து உள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், பயிற்சி விமானிகள் குறைந்த உயரத்தில் பறந்து செல்வதனால் விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்