உத்தரபிரதேசம்: லாரி மீது வேகமாக வந்த கார் மோதி பயங்கர விபத்து - 7 பேர் உயிரிழப்பு
|உத்தரபிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
பாண்டா,
உத்தரபிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
காமசின் சாலையில் உள்ள பஹாடியா டாய் கோவிலுக்கு அருகே கல்லு என்ற சிறுவனுக்கு நேற்று இரவு மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவனது குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர். வேகமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்பதால் கார் டிரைவர் 120 முதல் 130 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் திலோசா கிராமத்தைச் சேர்ந்த ஷகீல் (25), முஷாஹித் (24), முகமது கைஃப் (18), ஷைரபானோ (37), கல்லு (13), ஜாஹில் (25) மற்றும் ராஜ் கெங்கர் (28) என அடையாளம் காணப்பட்டனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.