< Back
தேசிய செய்திகள்
ஜே.பி. நட்டா தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்: 40 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

ஜே.பி. நட்டா தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்: 40 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
30 Aug 2022 9:27 PM GMT

திரிபுராவில் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அகர்தலா,

திரிபுராவில் இந்த ஆண்டு இறுதியில் கிராம பஞ்சாயத்து தேர்தலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. இதையொட்டி திரிபுராவின் மேற்கு மாவட்டமான குமுல்வங்கில் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பிரசார பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த பேரணியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் பா.ஜ.க தொண்டர்கள் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பா.ஜ.க. தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்-மந்திரி மாணிக் சாஹா குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்