< Back
தேசிய செய்திகள்
தம்பதியை தாக்கிய பெண் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
தேசிய செய்திகள்

தம்பதியை தாக்கிய பெண் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
25 March 2023 4:30 AM GMT

மாயமான செல்போன் கிடைத்தால் திரும்ப ஒப்படைத்துவிடும்படி கேட்ட தம்பதியை தாக்கிய பெண் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிகாரிப்புரா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிவமொக்கா-

மாயமான செல்போன் கிடைத்தால் திரும்ப ஒப்படைத்துவிடும்படி கேட்ட தம்பதியை தாக்கிய பெண் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிகாரிப்புரா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

செல்போன் மாயமானது

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா கூலகி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி அனுமம்மா. கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்களது மகனின் செல்போன் திடீரென மாயமானது. அந்த செல்போனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. செல்போன் தொலைந்து போனது குறித்து ரமேசும், அனுமம்மாவும் அதே பகுதியைச் சேர்ந்த ஈசுவரப்பா(வயது 55), அவரது மனைவி ரத்னம்மா(48) ஆகியோரிடம் கூறினர். மேலும் அந்த செல்போன் கிடைத்தால் தங்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுமாறு கேட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த ஈசுவரப்பாவும், ரத்னம்மாவும், தங்களது குடும்பத்தினர் கணேஷ்(38), ராகவேந்திரா(32) ஆகியோருடன் சேர்ந்து ரமேசையும், அனுமம்மாவையும் சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

தலா 3 ஆண்டு சிறை

இதுபற்றி ரமேஷ், சிகாரிப்புரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஈசுவரப்பா, கணேஷ், ராகவேந்திரா, ரத்னம்மா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது சிகாரிப்புரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவினாஷ் எம்.காளி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் வழக்கில் குற்றவாளிகளான ஈசுவரப்பா, ரத்னம்மா, கணேஷ், ராகவேந்திரா ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ரத்னம்மாவை பெண்கள் சிறையிலும், ஈசுவரப்பா, கணேஷ், ராகவேந்திரா ஆகியோரை சிவமொக்கா மாவட்ட மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்