< Back
தேசிய செய்திகள்
மத்தியபிரதேசத்தில் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தினத்தந்தி
|
28 July 2022 11:58 AM GMT

மத்தியப்பிரதேசத்தில் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பகுதியில் தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் பள்ளியில் 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அப்போது தடுப்பூசி செலுத்திய நபர் ஒரே சிரஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளார். இதனை அங்கிருந்த பெற்றோர் சிலர் கவனித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட முதன்மை சுகாதார துறை அதிகாரி டாக்டர் டி.கே.கோஸ்வாமி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திய நபர் பள்ளியில் இருந்து தப்பி சென்றுவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய நபர் ஜிதேந்திர அஹிர்வார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி கோஸ்வாமி கூறுகையில், ஒரே சிரஞ்ச் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 39 மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 19 மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மீதமுள்ளவர்களின் பரிசோதனை அறிக்கைகள் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜிதேந்திர அஹிர்வார் மீது அலட்சியமாக செயல்படுதல், ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், மாவட்ட சுகாதார அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்