< Back
தேசிய செய்திகள்
பஞ்சாபில் லாரியில் இருந்து 38 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது
தேசிய செய்திகள்

பஞ்சாபில் லாரியில் இருந்து 38 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

தினத்தந்தி
|
28 Aug 2022 1:33 PM GMT

பஞ்சாபில் லாரியில் இருந்து 38 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் ஷாஹித் பகத் சிங் நகரில் லாரியில் இருந்து 38 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.

எஸ்பிஎஸ் நகரில் வசிக்கும் குல்விந்தர், பிட்டு, ராஜேஷ் குமார், சோம்நாத் ஆகியோர் ஹெராயின் கடத்தலில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், எஸ்பிஎஸ் நகரில் உள்ள மஹாலோன் புறவழிச்சாலையில் ஒரு லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த லாரியை சோதனையிட்ட போது, ​​டூல்ஸ் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 கிலோ ஹெரோயினை போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்து தப்பி ஓட முயன்ற லாரி டிரைவரையும் அவரது கூட்டாளியையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் குல்விந்தர் ராம் மற்றும் பிட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் குஜராத்தில் உள்ள பூஜ் பகுதியில் இருந்து ஹெராயின் கொண்டு வருமாறு ராஜேஷ் தன்னிடம் கூறியதாக குல்விந்தர் கூறியுள்ளார்.

மேலும் ராஜேஷ் கூறியதன் பேரில் ஜனவரி மாதம் ஸ்ரீநகரில் இருந்து 30 கிலோ ஹெராயின் கொண்டு வந்ததாகவும் டெல்லியில் இருந்து ஒரு கிலோ ஹெராயின் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். ராஜேஷ் மற்றும் சோம்நாத் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் ராஜேஷ் மீது கொலை, போதைப்பொருள் உள்ளிட்ட 19 கிரிமினல் வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்