< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் அம்மை நோய்க்கு 2-வது உயிரிழப்பு பதிவு; 126 குழந்தைகளுக்கு பாதிப்பு
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அம்மை நோய்க்கு 2-வது உயிரிழப்பு பதிவு; 126 குழந்தைகளுக்கு பாதிப்பு

தினத்தந்தி
|
15 Nov 2022 8:06 AM GMT

மராட்டியத்தின் மும்பை நகரில் அம்மை நோய் பாதித்த ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளது.



மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் அம்மை நோய் பாதித்த ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளது.

மராட்டியத்தின் மும்பை நகரில் நல் பஜார் பகுதியில் வசித்து வந்த ஒரு வயது குழந்தை ஒன்று உடல்நலம் பாதித்து கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த குழந்தைக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளை உண்டாக்கியது. இதனால், கடந்த சனி கிழமை, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருந்தது. 2 நாட்களாக சிகிச்சை அளித்த நிலையில், நேற்று மதியம் குழந்தை உயிரிழந்து உள்ளது.

இதுபற்றி டாக்டர் மங்களா கோமரே கூறும்போது, குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. காய்ச்சல் மட்டும் இருந்தது. கொப்புளங்கள் இல்லை. குழந்தை 10 கிலோ எடை இருந்துள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர். இணை நோய்கள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இதனால், மராட்டியத்தில் அம்மை பாதிப்புக்கு 2-வது உயிரிழப்பு பதிவாகி உள்ளது. எனினும், அம்மை, நிம்மோனியாவுடன் கூடிய செப்டிசீமியா எனப்படும் பாக்டீரியாவால் ரத்தத்தில் விஷம் கலந்து குழந்தை உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என இறப்புக்கான காரணம் தெரிவிக்கின்றது.

இந்த மருத்துவமனையின், அம்மை பாதிப்புக்காக ஐ.சி.யூ.வில் 4 நோயாளிகள் உள்ளனர். கோவண்டி நகரில் சந்தேகத்திற்குரிய வகையிலான 61 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 4 பேருக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிக நெருக்கடி, விழிப்புணர்வு இல்லாமை, புலம்பெயர்தல் ஆகியவை இடர் விளைவிப்பவை. அறியாமை, தடுப்பூசி போட தயக்கம், சுகாதார பணியாளர்களை பகையாளிகளாக பார்ப்பது ஆகியவை மிக பெரிய எதிரியாக உள்ளது என மத்திய சுகாதார குழு தனது ஆய்வில் அறிந்து உள்ளது.

மும்பையில் குழந்தைகள் இடையே அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மும்பையில் சந்தேகத்திற்குரிய வகையில் இதன் பாதிப்புக்கு ஆட்பட்ட 617 பேர் இருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களில் 109 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. 126 குழந்தைகளுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்து உள்ளது.

மேலும் செய்திகள்